வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றங்கள் – இனி கட்டாயம்!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியிடங்களுக்கு சென்றுவர பயன்படுத்தப்படும் லாரிகளில் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் கட்டாய அம்சங்கள் குறித்து வட்டார அமைச்சரான எமி கோர் நேற்றைய தினம் (மார்ச் 09) குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் அவசியம் என்றும், மழைக் காலங்களில் ஊழியர்களை பாதுகாக்க மேற்கூரை அமைப்புகள் கட்டாயமாக்கப்படும் என்றும் கூறினார்.
போக்குவரத்து அமைச்சகத்தின் விநியோக குழு விவாதத்தின்போது பேசிய அமைச்சர் எமி கோர், ஊழியர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க, சமநிலையான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்றும், நிலையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் அதிகபட்சமாக 12,000 கிலோ எடையுள்ள அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக 3,500 கிலோ எடையுள்ள அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் வேக எச்சரிக்கை கருவிகள் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, அனைத்து லாரிகளிலும் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.
மேலும், மழைக் காலங்களில் ஊழியர்களை பாதுகாக்க அனைத்து லாரிகளிலும் கட்டாயமாக மழை பாதுகாப்பு கவசங்கள் முழுவதுமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.