இந்திய இனத்தவர் மீது இன ரீதியாக அவமதிப்பு – சிங்கப்பூரருக்கு 4 வாரம் சிறை

சிங்கப்பூர்: சக பயணி ஒருவர் மீது இன ரீதியாக அவமதிப்பு செய்த குற்றத்திற்காக 40 வயதான சிட்டி ஆயிஷா ஜாஃபர் என்ற சிங்கப்பூர் பெண்ணுக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, இதில் பாதிக்கப்பட்டவர் இந்திய இனத்தைச் சேர்ந்த 33 வயது சிங்கப்பூரர் என மதர்ஷிப் கூறியுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில், இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வழிமுறைகள்!
என்ன நடந்தது?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலை 9:30 மணியளவில், பாதிக்கப்பட்டவர் துவாஸ் சோதனைச் சாவடியில் பேருந்தில் ஏறினார். அந்த நேரத்தில், சிட்டி ஆயிஷாவும் அந்த பேருந்தில் பயணித்துள்ளார்.
பேருந்தில் இருந்தபோது, சிட்டி ஆயிஷா, பாதிக்கப்பட்டவரை பல முறை முறைத்து பார்த்து, இனவெறிக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.
அதாவது, அவரை நோக்கி “கருப்பு தோல் கொண்ட இந்தியர்” என்று கூறியதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் தனது மொபைல் தொலைபேசியை எடுத்து சம்பவத்தை பதிவு செய்தார்.
அதன் பின்னரும், சிட்டி ஆயிஷா, தொடர்ந்து பாதிக்கப்பட்டவரிடம் இனவெறி கருத்துக்களை கூறியுள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்டவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து, பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் தெரிவித்தார்.
சிட்டி ஆயிஷா, இன ரீதியாக மேலும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது காணொளி ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்காக, மூன்று ஆண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.