சிங்கப்பூரில் தமிழக ஊழியரின் நிலை என்ன ஆனது? தமிழக முதல்வருக்கு சென்ற கோரிக்கை – கண்ணீரில் குடும்பம்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் வரதராஜன் (28). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஊழியராக கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மதியம் தங்கும் விடுதியில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர், அடுத்த நாள் (டிசம்பர் 06) இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் வரதராஜன் தங்கும் விடுதிக்கு திரும்பவில்லை.
இதையடுத்து, அவரது சகோதரர் வரதராஜனை காணவில்லை என அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வரதராஜன் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு 100 நாட்களை கடந்தும் இதுவரை அவர் எங்கு உள்ளார் என்ற தகவல் கிடைக்கவில்லை.
மேலும், வரதராஜனின் தாய் மற்றும் தங்கையின் கணவர் ரகுநாத் ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி எம்பி கவுதமசிகாமணி, வெளிநாடு நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்.
வரதராஜனின் நிலைமை குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் பெரிதும் கவலையில் உள்ளனர். மத்திய அரசும், தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கை எடுத்து வரதராஜனை மீட்டுத்தருமாறு குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கப்பூரில் வரதராஜனை யாரேனும் கண்டால் +917358845118 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து இனி ஈஸியா சிங்கப்பூர் செல்லலாம் – மதுரையில் இருந்து தினசரி விமானம்!