சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் இருவர் சம்பவ இடத்திலேயே பலி – துவாஸில் நடந்த கொடூர சம்பவம்

சிங்கப்பூரில் உள்ள துவாஸ் கெப்பல் கப்பல் தளத்தில் கடந்த மார்ச் 28ம் தேதி பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கெப்பல் கப்பல் தளத்தில் இருந்து சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து அவர்கள் தூக்கி வீசப்பட்டு பின்னர் உயிரிழந்தனர் எனவும், அவர்கள் 42, 30 வயதுடையவர்கள் எனவும் சிங்கப்பூரில் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மனிதவள அமைச்சு மேலும் குறிப்பிடுகையில், கப்பலின் மேல் உள்ள கட்டமைப்பைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் மேடையில் மூன்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் என்றும், இரவு 10 மணி அளவில் அந்த கட்டமைப்பு ஏதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததாகவும், மேடையின் ஒரு பகுதி கப்பலில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் அவர்கள் வெளியே வீசப்பட்டனர் என கூறியுள்ளது.
பின்னர், சம்பவ இடத்திற்கு மருத்துவ உதவியாளர்கள் உடனடியாக விரைந்து சோதனை மேற்கொண்டபோது, தூக்கி வீசப்பட்ட இரு ஊழியர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மூன்றாவது ஊழியர் குழுவால் காப்பாற்றப்பட்டு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும், இச்சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.