சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பி ஆசையாய் வாங்கிய எலக்ட்ரிக் பைக்; திடீரென தீப்பற்றி எரிந்த அதிர்ச்சி!

தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி படுகைகளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். சிங்கப்பூரில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வரும் இவர், தாயகம் திரும்பி கடந்த 5 மாதத்திற்கு முன்பு எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை அன்று விடுமுறை முடிந்து முருகேசன் சிங்கப்பூருக்கே மீண்டும் திரும்பியுள்ளார். அவர் வைத்திருந்த எலக்ட்ரிக் பைக்கை அவரது நண்பர் பாலு என்பவரின் கடையில் விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 28) காலை பாலு கடையை திறந்தபோது, எலக்ட்ரிக் பைக்கில் இருந்து புகை வருவதைக் கண்டுள்ளார். பின்னர் திடீரென பைக் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
அவர் அருகில் தண்ணீர் இல்லாத காரணத்தால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மினரல் வாட்டர் கேன் நீர் மூலம் எலக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் சமீபகாலமாக எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பற்றி எரியும் சம்பவத்தால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.